சென்னை: புதிதாக மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் நுகர்வோருக்கு 3 முதல் 7 நாட்களில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய மின் விநியோக விதிகளை வெளியிட்டது. அதன்படி, வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த இடத்தில் இணைப்பு வழங்க, கூடுதல் மின் சாதனங்கள் நிறுவ அவசியமில்லாத பட்சத்தில், மூன்று நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.
அதிகபட்சம், ஏழு நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். புதிய இணைப்புக்கான விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை என தாமதம் செய்யக்கூடாது, தகவல்கள் சரியாக நிரப்பப்படவில்லை என்றால் அடுத்த 3 நாட்களுக்குள், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவருக்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும்.
மின் கட்டண விகிதம் மாற்றம், குறைபாடு உடைய மீட்டர்களை மாற்றி தரும் சேவைகளுக்கான கால அவகாசங்களும் குறைக்கப்பட்டு உள்ளன. புதிய விதிகள் குறித்து பிரிவு அலுவலகங்களுக்கு தெரிவித்து தவறாமல் பின்பற்ற அறிவுறுத்துமாறு மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு வாரியம் உத்தரவிட்டுள்ளது.