நெல்லையில் மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும்: மாநகராட்சி கட்டுப்பாடு
நெல்லை: நெல்லையில் மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட திருமால் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது, அங்கே சுற்றித் திரிந்த மாடு மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றி திரிகின்றன.
இதனால், பல்வேறு தெருக்கள் வழியாக நடந்து செல்பவர்களும், பைக்கில் செல்பவர்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழப்புகள் நிகழ்கிறது. இதற்கு மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நெல்லையில் மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா உத்தரவிட்டுள்ளார்.
சாலையில் சுற்றி திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மாடுகளின் உரிமையாளர்கள் மீது பிராணிகள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்திற்கு இடையூறாக அச்சுறுத்தலாக சாலையில் மாடுகளை அவிழ்த்துவிடக் கூடாது. நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1988ன் படி மாநகராட்சி எல்லைக்குள் அனுமதி இன்றி யாரும் மாடுகள் வளர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.