திருநெல்வேலி எம்பி தேர்தல் வழக்கு நயினார் நாகேந்திரன் ஒரு மணிநேரம் சாட்சியம்: விசாரணை ஜூலை 2க்கு தள்ளிவைப்பு
சென்னை: கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு கடந்த 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, ராபர்ட் புரூசுக்கு சொந்தமான சொத்துகள் குறித்த சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நயினார் நாகேந்திரன் ஆஜராகியிருந்தார். அவரிடம் ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
ராபர்ட் புரூசுக்கு எதிரான வழக்கு, அவரது சொத்து விவரங்கள் குறித்த ஆவணங்களை பெற்றது குறித்து, ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் கேள்விகளை எழுப்பி சுமார் ஒரு மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தார். குறுக்கு விசாரணை முடிவடையாததால், விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் மீண்டும் ஆஜராகுமாறு நயினார் நாகேந்திரனுக்கு உத்தரவிட்டார்.


