Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் கல்வி நிதி ரூ.2,151 கோடி விடுவிக்க வேண்டும்

சென்னை: தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2,151 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும். கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் பிரதமர் மோடியிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21ம் தேதி தலை சுற்றல் காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிந்துரையின்படி அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது நலம்பெற்று வீடு திரும்பியுள்ளார். முன்னதாக மருத்துவமனையில் இருந்தபோதே, தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார். அப்போது கனிமொழி எம்பி மற்றும் முதல்வரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில், ‘ஆஸ்பத்திரியில் இருப்பதால், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதை பிரதமரிடம் வழங்குவார்’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த மனு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்பட்டது. அவர் இந்த மனுவை, கங்கைகொண்ட சோழபுரத்தில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

தமிழ்நாடு அரசால் 2018ம் ஆண்டு முதல் சமக்ரா சிக்ஷா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொடர்ந்து செயல்திறனை அதிகரித்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கை 2020 முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஒன்றிய அரசு வைத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ மற்றும் கொள்கை அடிப்படைகளில் தேசியக் கல்விக் கொள்கை 2020ன் சில அம்சங்களில், குறிப்பாக மும்மொழிக் கொள்கை மற்றும் 5+3+3+4 கட்டமைப்பில் பள்ளிக் கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றில் தனது மாற்றுக்கருத்துகளை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைப்பில் தற்போது 43.90 லட்சம் மாணவர்கள், 2.20 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 32,000-க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்கள் உள்ளனர். இந்த அளவிலான மற்றும் முக்கியத்துவமிக்க திட்டத்திற்கு தேவையான நிதிகளை வழங்காமல் இருப்பது, லட்சக்கணக்கான மாணவ மாணவியரின் எதிர்காலத்தை பாதித்து வருகிறது. 2024-25ம் நிதியாண்டிற்கான நிலுவையிலுள்ள ரூபாய் 2,151.59 கோடி ஒன்றிய அரசின் பங்கை உடனடியாக விடுவிக்கவும், 2025-26ம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்கிடவும், பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் நிதியினை விடுவித்திடவும் வேண்டும்.

  • பத்தாண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள பல முக்கியமான ரயில் பாதை திட்டங்களான திண்டிவனம்- செஞ்சி -திருவண்ணாமலை (70 கி.மீ) ரயில் பாதை, ஈரோடு-பழனி (91 கி.மீ) ரயில் பாதை, அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி (60 கி.மீ) ரயில் பாதை, அத்திப்பட்டு-புத்தூர் (88 கி.மீ.)ரயில் பாதை, மகாபலிபுரம் வழியாக சென்னை-கடலூர் (180 கி.மீ) ரயில் பாதை ஆகிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    87 கிமீ நீள திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இரட்டை பாதை பணியினை துரிதப்படுத்திடவும், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி ஓசூர் புதிய பாதைக்கு ஒப்புதல் அளித்திடவும், கோயம்புத்தூர்-பல்லடம்-கரூர், கோயம்புத்தூர்- கோபிசெட்டிபாளையம்- பவானி-சேலம், மதுரை- மேலூர்- துவரங்குறிச்சி- விராலிமலை- இனாம்குளத்தூர் மற்றும் மதுரை நகரைச் சுற்றி புறநகர் ரயில் ஆகிய திட்டங்களுக்கு வழித்தட ஆய்வு/விரிவான திட்ட அறிக்கை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    சென்னை பெருநகரப் பகுதியில் புறநகர் ரயில் சேவைகளை உச்ச நேரங்களில் இயக்க இடைவெளி நேரத்தை குறைத்திடவும், குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத மின்சார ரயில் பெட்டிகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்திடவும், முக்கிய புறநகர் வழித்தடமான தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையேயான 4-வது வழித்தடத்தை அனுமதித்து செயல்படுத்திடவும், ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை திட்டத்தை விரைவாக செயல்படுத்திடவும், விரைவான ஒப்புதல்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

  • கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம்-34.8 கி.மீ.க்கு ரூ.10,740.49 கோடியிலும் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம்-32 கி.மீ.க்கு ரூ.11,368.35 கோடியிலும் கட்டி முடிப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளது. மெட்ரோ ரயில் கொள்கை-2017 இன்படி, ஒன்றிய அரசும் மற்றும் தமிழ்நாடு அரசும், 50:50 சம பங்களிப்பு அடிப்படையில், இரு திட்டங்களையும் இணைந்து செயல்படுத்துவதற்கான, ஒப்புதலையும் நிதியுதவியையும், விரைந்து வழங்கிட, ஆவன செய்ய வேண்டும்.
  •  சமீப காலமாக, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த தொடர்ச்சியான கைதுகள் மாநிலத்தில் உள்ள ஏழை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாக பாதித்து வருகிறது. இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிப்பது தொடர்பாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பலமுறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. தூதரக நடவடிக்கைகள் மூலம் பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. இந்த சிக்கலான பிரச்னைக்கு நிரந்தர தீர்வைக் காண பிரதமர் இதில் தனது நேரடி கவனத்தை செலுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விரைவில் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
  •  2018-19ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை பெருவழிச்சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 1971-1975 காலகட்டத்தில், சேலம் உருக்காலை அமைப்பதற்காக 3973.08 ஏக்கர் நிலங்களை தமிழ்நாடு அரசு வழங்கியது. இதில் 1503.44 ஏக்கர் நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. சேலம் உருக்காலையில் உள்ள பயன்படுத்தப்படாத நிலத்தைப் பயன்படுத்தி பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலையின் கீழ் சேலத்தில் பாதுகாப்பு தொழில் தொகுப்பினை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளது. பிரதமர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சேலம் உருக்காலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை, பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறுவுவதற்கு ஏதுவாக திரும்ப வழங்க ஆவன செய்ய வேண்டும்.

    அவ்வாறு மனுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • 2024-25ம் நிதியாண்டிற்கான நிலுவையிலுள்ள ரூபாய் 2,151.59 கோடி ஒன்றிய அரசின் பங்கை உடனடியாக விடுவிக்க வேண்டும். 2025-26ம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்க வேண்டும். பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் நிதியினை விடுவித்திட வேண்டும்.
  • இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. இந்த சிக்கலான பிரச்னைக்கு நிரந்தர தீர்வைக் காண பிரதமர் இதில் தனது நேரடி கவனத்தை செலுத்த வேண்டும்.