மும்பை : சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால், அபராதத் தொகை வசூலிக்கும் நடைமுறையை கைவிட, பொதுத்துறை வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதனை பராமரிக்காவிட்டால், அதற்கு வங்கிகள் தனியாக அபராதம் விதித்து வருகின்றன. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் சுமையாக உள்ளது. ஆனால், தனியார் வங்கிகள் பெரும்பாலும், சம்பள கணக்குகள் மற்றும் பிக்சட் டிபாசிட் வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குக்கு, குறைந்தபட்ச இருப்பு வரம்பு விதிப்பதில்லை.
எனவே பொதுத்துறை வங்கிகளை விட சலுகைகள் வழங்கும் தனியார் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட, பொதுத்துறை வங்கிகள் முடிவு எடுத்துள்ளன. ஏற்கனவே, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி இதை அமல்படுத்தி விட்டன. குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு பதிலாக, டெபிட் கார்டு, ஏ.டி.எம்.,மில் கூடுதல் பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் போன்றவற்றின் வாயிலாக, வருவாய் பெற திட்டமிட்டுள்ளன.


