Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாணவி வழக்கில் சிறப்பாக செயல்பட்டது காவல்துறை; நீங்கள் புலம்பாமல் அமைதியாக தூங்குங்கள்: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு அரைவேக்காடு என்பதை அவரே அம்பலப்படுத்திக்கொள்கிறார் என இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு அரைவேக்காடு என்பதை அவரே அம்பலப்படுத்திக்கொள்கிறார். உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உண்மை தான். அந்த ஷிமிஜி தமிழ்நாடு காவல்துறைகோ திமுக அரசுக்கோ தொடர்பு இல்லாததா? அந்த ஷிமிஜி வேறு மாநில அதிகாரிகளோ ஒன்றிய அரசின் அதிகாரிகளோ இல்லை.

அவர்கள் தமிழ்நாடு அரசின் காவல்துறை தானே? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஷிமிஜி குழு சிறப்பாக செயல்பட்டது என்றால் திமுக ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது என்று தான் பொருள். அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்தது திமுக அரசின் காவல்துறை. அவர் ஜாமின் பெறாத வகையில் நீதிமன்றத்தில் வாதாடியது திமுக அரசின் வழக்கறிஞர்கள். வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் நியமித்த ஷிமிஜி குழு பெண் அதிகாரிகள் மூவரும் அவர்களுக்கு துணையாக இருந்த விசாரணை குழுவும் திமுக அரசின் காவல்துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள்.

இப்படி, திமுக அரசின் கீழ் செயல்படும் காவல்துறையால் தான் ஐந்தே மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றம் ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமி ஏன் எரிகிறது? உடல் முழுவதும் இவ்வளவு எரிவது நல்லதல்ல, மருத்துவரை அணுகுவது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிமுகவினர், விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளை கைது செய்தது சிபிஐ. தீர்ப்பு வழங்கியது சிபிஐ நீதிமன்றம். சாட்சிகள் பிறழ்சாட்சியமாக மாறாமல் காத்தது திமுக அரசின் காவல்துறை என்ற போதிலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தாம் தான் காரணம் வாய்க்கூசாமல் எடப்பாடி பழனிசாமி கூறியதை பார்த்து சந்தி சிரித்தது என்பது தானே உண்மை.

அண்ணா பல்கலை. வழக்கில் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடந்தது என்பதற்காக நீதிமன்றம் தான் பாராட்டுக்குரியது எடப்பாடி பழனிசாமி சொல்வதும், விசாரித்து ஆதாரங்களை சமர்பித்த காவல்துறையினருக்கும், குற்றத்தை நிரூபிக்க வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பாராட்டுக்குரியவர்கள் இல்லை என சொல்வதும் அவரின் அறியாமையை காட்டுகிறது. "அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய SIT விசாரணையை நீங்கள் Influence செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?" என்று முதலமைச்சரைப் பார்த்து கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி, அதற்கான ஆதாரத்தை SIT நியமித்த நீதிமன்றத்திடம் ஓரிரு நாட்களுக்குள் கொடுத்துவிட்டு, சொல்லும் செயலும் ஒன்றே மானமுள்ளவர் பழனிசாமி என்று நிரூபிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் ஒரு மானங்கெட்ட பிறவி பழனிசாமி என ஊடகங்கள் முன்பு ஒப்புக்கொள்ள வேண்டும். அதை செய்வீரா?. அதிமுக ஆட்சி அமைந்தால் "அந்த சார்கள்?" யார் என்பதை கண்டுபிடிப்போம் என எந்த அடிப்படை அறிவோ வெட்கவோ இல்லாமல் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, கொடநாடு கொலை, கொள்ளை... போன்ற அதிமுக ஆட்சியில் நடந்த குற்றங்களின் விசாரணையை எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படி கையாண்டது என்பது உலகத்திற்கே தெரியும். அண்ணா பல்கலை. வழக்கை விசாரித்த ஷிமிஜி குழு நீதிமன்றத்தின் முழு மேற்பார்வையில் செயல்பட்டது, அதுகூட திமுக அரசின் காவல்துறைக்கு உட்பட்டது என்றாலும் விசாரணை நீதிமன்றமும் மேற்பார்வை பார்த்த சென்னை உயர்நீதிமன்றமும் திமுக ஆட்சிக்கு உட்பட்டவை இல்லையே?...

அந்த சார் யார்? என்பதற்கு ஆதாரம் இருந்தால் நேரடியாக நீதிமன்றத்தில் சமர்பித்து சந்தேகத்தை இப்போதே உறுதி செய்யலாமே? எந்த ஆதாரமும் கையில் இல்லாமல் கடந்த 5 மாதமாக புலம்பியது போதும் எடப்பாடி பழனிசாமி அவர்களே? குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தண்டனை வாங்கி தரும் வேலையை திமுக அரசு சிறப்பாக செய்துவிட்டது. நீங்கள் புலம்பாமல் அமைதியாக தூங்குங்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததை திமுக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அம்பலப்படுத்தியால், காழ்ப்புணர்ச்சியாக அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி "யார் அந்த சார்?" என சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் செய்த எடப்பாடி பழனிசாமி, அதற்கான ஆதாரங்களை விசாரணை நீதிமன்றத்தில் கொடுத்து நிரூபித்திருக்க வேண்டாமா? - ஏன் ஆதாரங்களை இதுவரை தரவில்லை? அவதூறுக்கு ஆதாரம் இருந்தால் தானே தர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.