Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமைச்சர் இ.பெரியசாமி, தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 11-வது மாநில வேலை உறுதி மன்ற குழுக் கூட்டம்

சென்னை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 11-வது மாநில வேலை உறுதி மன்ற குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 11-வது மாநில வேலை உறுதி மன்ற குழுக் கூட்டம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, தலைமையிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 8-வது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கத்தில் இன்று 12.11.2024 நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரால் தலைமையுரை வழங்கப்பட்டது.

கடந்த மூன்றாண்டுகளில் மொத்தம் 89.97 கோடி மனித சக்தி நாட்கள் எய்தப்பட்டுள்ளன. இதில் 2024-25ம் ஆண்டில் இதுவரை 15.64 கோடி மனித சக்தி நாட்கள் எய்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட இயற்கை வள மேலாண்மை, வேளாண்மை சார்ந்த பணிகள், ஊரகசாலை இணைப்பு, ஊரகக் கட்டமைப்பு, நில மேம்பாட்டு பணிகள் மற்றும் தனிநபர் சொத்து உருவாக்கம் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த மூன்றாண்டுகளில் மொத்தம் 13.64 இலட்சம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் 2024-25ம் ஆண்டில் இதுவரை 1.89 இலட்சம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 3,743 அங்கன்வாடி மையங்கள், 2,187 ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 803 உணவு தானியக் கிடங்குகள், 3,401 பள்ளிகளுக்கான சமையலறைக் கூடங்கள், 8,025 பள்ளிகளுக்கு சுற்று சுவர் கட்டுதல், 22,419 தடுப்பணைகள், 16,476 பண்ணைக்குட்டைகள், 8,543 தனி நபர் கிணறுகள் மற்றும் பொது கிணறுகள், 21,455 பேவர் பிளாக் சாலைகள் மற்றும் 20,241 சிமெண்ட் சாலைகள், 12,727 ஓரடுக்கு ஜல்லி சாலைகள் கடந்த மூன்றாண்டுகளில் செயற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மொத்தம் 825 வட்டார நாற்றாங்கால்களில் வளர்க்கப்பட்ட 1.25 கோடி மரக்கன்றுகள் ஊரகப்பகுதிகளில் நடப்பட்டு, தமிழகத்தின் பசுமை போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகள் மன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தருமபுரி மக்களவைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கி.கலைவாணன் ஆகிய உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி இயக்குநர் பா.பொன்னையா, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூடுதல் இயக்குநர்(MGNREGS) ச.சா.குமார் ,வேளாண் உற்பத்தி மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நெடுஞ்சாலை (ம) சிறு துறைமுகங்கள் துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஆறு ஊராட்சி மன்ற தலைவர்களும் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் காந்திகிராம் அறக்கட்டளை ஆகிய இரு அரசு சாரா நிறுவன (NGO) பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.