Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மேட்டுப்பாளையம், நெல்லை, கோவை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: மேட்டுப்பாளையம், நெல்லை, கோவை ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் தினந்தோறும் ரயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிமாக உள்ளது. பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது அதிர்ஷ்டம் தான்.

நீண்ட தூரம் களைப்பின்றி வசதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.

ரயில்களின் ஸ்லீப்பர் பெட்டிகளில் அதிகளவு மக்கள் முன்பதிவு செய்து பயணம் செய்து வரும் நிலையில், அண்மை காலமாக ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான மக்கள் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இரண்டு மட்டுமே இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது என்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 2 ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் அடுத்த மாதம் முதல் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

இதேபோல் சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை மேட்டுப்பாளையம் - நீலகிரி எக்ஸ்பிரஸ், திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகளும், சென்னை - திருநெல்வேலி, சென்னை - செங்கோட்டை, நாகர்கோவில் - மும்பை, கன்னியாகுமரி புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கபட உள்ளது.

முக்கியமான 9 ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கோவை சென்னை, நெல்லை சென்னை, தென்காசி சென்னை ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பதில்லை. பொதுவாக ஏழை, நடுத்தர மக்களே ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த பெட்டிகளை குறைத்து விட்டு, ஏசி பெட்டிகளுக்கு ரயில்வே முன்னுரிமை கொடுப்பது ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.