மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் ரூ.150 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், மாநகராட்சி பில் கலெக்டர்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சித்ரா விஜயன் உத்தரவிட்டார்.
இதுதவிர மதுரை மாநகராட்சியில் பணியாற்றி ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்ட உதவி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ரவியை நகராட்சி நிர்வாக ஆணையம் சஸ்பெண்ட் செய்து விசாரித்து வருவதாக தெரிகிறது. முறைகேடு தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வின்போது சில பைல்கள் காணவில்லை. அது கிளார்க் ஒருவரது வீட்டிலும், வெளியிலும் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்காலிக பணியாளர்களான மகாபாண்டி, நாகராஜ் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேரை டிஸ்மிஸ் செய்து ஆணையாளர் நேற்றிரவு உத்தரவிட்டுள்ளார். மேலும் பில் கலெக்டரான காளிமுத்துபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.