கள்ளக்காதல் தகராறில் வழக்கறிஞர் காதலியை சுட்டுவிட்டு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட காதலன்: ராஜஸ்தானில் பயங்கரம்
கோட்டா: ராஜஸ்தானில் கள்ளக்காதல் தகராறில் தனது வழக்கறிஞர் காதலியை சுட்டுவிட்டு அச்சத்தில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த கரண் குர்ஜர் (32) என்பவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான பூர்வா ஷர்மா (29) என்பவருடன் அவருக்குக் காதல் ஏற்பட்டு, இருவரும் தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10 மணியளவில், கரணும் பூர்வாவும் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
ஆத்திரமடைந்த கரண், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பூர்வாவின் தலையின் பின்பகுதியில் சுட்டுள்ளார். அப்போது அவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்ததைக் கண்ட கரண், காதலி இறந்துவிட்டதாக நினைத்து, அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கரண் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பூர்வா ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.