Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் தெனாவட்டாக பேசமாட்டேன்; மன்னிப்பு கடிதம் கேட்க எடப்பாடி பழனிசாமி யார்?: கொதிக்கும் ஓபிஎஸ்

அவனியாபுரம்: மன்னிப்பு கடிதம் கேட்க எடப்பாடி பழனிசாமி யார்? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை செல்ல மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: நான் ஒருபோதும் அதிமுகவுக்கு உண்மையாக இருந்தது கிடையாது என எடப்பாடி கூறியுள்ளார். இதற்கு நீண்ட விளக்கத்தை நேற்று அளித்திருக்கிறேன். கட்சி நன்மை கருதி இதற்கு மேல் விளக்கம் சொல்ல முடியாது. அவரைப் போல் நான் தெனாவட்டாகவோ, சர்வாதிகாரத்தோடு பேசமாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும்.

கட்சியை இணைப்பது தான் ஒரே வழி. இனி வரக்கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணைய வேண்டும். அவ்வாறு கட்சி இணையாமல் இருந்தால் அந்த வெற்றி சாத்தியமில்லை என்பது என்னுடைய கருத்து மட்டுமல்ல, தொண்டர்களின் கருத்தும் அது தான். என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்வதற்கு அவர் யார்?. பொதுச்செயலாளர் வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் போட்டியிடவில்லை. அதனால் தான் இரு இலையுடன் கூடிய மாங்கனி அங்கு போட்டியிடுகிறது என்று சொன்னேன். அதுதான் நடக்கப் போகிறது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். உறுதியாக ஒரு தொண்டர் தான் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.