Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் அமித்ஷா நாளை மறுநாள் தமிழ்நாடு வருகை? பாஜ நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜ நிர்வாகிகளுடன் தேர்தல் கூட்டணி தொடர்பாக அவர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் முடுக்கி விட்டுள்ளன. ஆளுங்கட்சியான திமுகவில் கடந்த முறை கூட்டணியில் இடம் பெற்ற அதே கட்சிகள் இணைந்து மீண்டும் தேர்தலை சந்திக்கின்றன. மேலும் சில கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, அதிமுக தலைமையிலான அணியில் பாஜ மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணி அமைந்து 8 மாதங்களில் வேறு எந்த கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவில்லை. அதிமுக மற்றும் பாஜ தரப்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மட்டும் நடந்து வருகிறது. ஆனால், இதுவரை அவர்களும் கூட்டணி குறித்து எந்த முடிவையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவியை சேர்க்க வேண்டும் என்று பாஜ மேலிடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், எடப்பாடி அவர்களை சேர்க்க மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.

கடந்த புதன்கிழமை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள் தொடர்பாக முடிவு எடுக்கக் கூடிய முழு அதிகாரமும் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், ஓபிஎஸ், டிடிவி இருவரும் சேர்க்கப்படுவார்களா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடியை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.

அப்போது, ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார்.

அப்போது அவர் கூட்டணி தொடர்பாக பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமித்ஷாவின் தமிழகம் வருகை தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கடந்த 2 வாரங்களில் ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலை ஆகியோரை அமித்ஷா சந்தித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தி இருந்தார்.

இதற்கிடையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் வருவதாகவும், தமிழகம் வரும் அமித்ஷா கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள் தொடர்பாக பாஜ நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக-பாஜ கூட்டணி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டணியில் இதுவரை எந்தவொரு கட்சியும் சேர முன்வராத நிலையில், அதுகுறித்தும் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.. மேலும் தேமுதிக, பாமக உள்பட சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக-பாஜ கூட்டணி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டணியில் இதுவரை எந்தவொரு கட்சியும் சேர முன்வராத நிலையில், அதுகுறித்தும் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.