Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குருமலை காட்டில் நாய்களை வைத்து முயல் வேட்டையாடிய 5 பேர் கைது

*சொகுசு கார், லோடு ஆட்டோ பறிமுதல்

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காட்டில் வேட்டை நாய்கள் மூலம் முயல் வேட்டையாடப்படுவதாக கோவில்பட்டி வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இவரது ஆலோசனையின்பேரில் வனக்காப்பாளர் பேச்சிமுத்து, வனவர்கள் கேசவன், பிரசன்னா, பாலமுருகன், வனக்காவலர் ராமசாமி ஆகியோர் குருமலை காட்டுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சொகுசு கார் மற்றும் லோடு ஆட்டோவில் வந்த சிலர், நாய்களை வைத்து முயல்களை வேட்டையாடுவது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கோவில்பட்டி அருகே துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் (65), முத்துக்குமார் (44), கட்டபொம்மன் (32), மணிகண்டன் (41), முத்துகணேசன் மகன் கார்த்திகேயன் (30) என்பதும், சொகுசு கார் மற்றும் லோடு ஆட்டோவில் நாய்களுடன் வந்து முயல்களை வேட்டையாடுவதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த வனத்துறையினர், சொகுசு கார், லோடு ஆட்டோ மற்றும் 5 நாய்கள், 6 இறந்த முயல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் பெருமாள் உள்பட 5 பேரையும் கோவில்பட்டி ஜேஎம் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட 6 முயல்களின் உடல்கள் கால்நடை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு பரிசோதனைக்கு பின்னர் குழிதோண்டி புதைக்கப்பட்டன.