Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடைக்கானலில் விதிமீறி வீடு கட்டுவதாக வழக்கு.. நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீதான நடவடிக்கை என்ன?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கொடைக்கானலில் விதி மீறி வீடு கட்டிவரும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில், பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களாக்களை கட்டி உள்ளனர்.

பங்களாவுக்கு கொடைக்கானல் நகராட்சியிடம் அனுமதி பெறாமல், விதிகளை பின்பற்றாமல் கட்டிடம் எழுப்பியுள்ளனர். விதிகளை பின்பற்றாமல் கட்டிடம் கட்டுவதால் கொடைக்கானலில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் உள்ள வீடுகள் இடிவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. மேலும், கனரக இயந்திரம் மூலம் மலையில் உள்ள பாறைகள் அகற்றப்பட்டுள்ளன. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நடிகர்கள் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டடங்களின் கட்டுமானபணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என்று அரசு வழக்கறிஞர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி நடிகர்கள் பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், இருவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.