கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் திரிவேணி சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் புனித நீராடுவர். பின்னர் அங்குள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி இன்று வார விடுமுறையின் கடைசி நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அவர்கள் சூரிய உதயத்தை பார்க்க திரிவேணி சங்கமத்தில் திரண்டனர். ஆனால் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை முதலே வானம் மப்பும் மாந்தரமுமாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இது நீடித்ததால் கடலில் சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் திரிவேணி சங்கமத்தில் திரண்டு நின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் கடலில் புனிதநீராடி விட்டு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்தனர்.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் படகு மூலம் கடலில் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகம் நோக்கி விரைந்தனர். அங்கு டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்ததை பார்க்க முடிந்தது. காலை 8 மணி முதல் வழக்கம் போல் படகுசேவை தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலைகளுக்கு சென்று சுற்றிபார்த்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கன்னியாகுமரியில் உள்ள பெரும்பாலான கடைகளில் வியாபாரம் சூடிபிடித்தது.