Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே ரயில் கேட் பகுதியில் விரைந்து சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திரா நகர் மற்றும் கனக துர்க்கை அம்மன் நகர் பகுதி பொதுமக்கள், காஞ்சிபுரம் வருகை தந்த ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். காஞ்சிபுரம் வருகை தந்த ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ஆய்வு செய்து, ரயில் நிலையத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அங்கு திடீரென வந்த இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் ரயில்வே இணையமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த, மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மற்றும் புதிய ரயில் நிலையம் என 2 ரயில் நிலையங்கள் உள்ளன. புதிய ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைப்பதால் அப்பகுதி வழியாக அதிகளவு போக்குவரத்து காணப்படும்.

இந்த, ரயில் நிலையத்தில் கேட் மூடப்பட்டால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை இருந்தது. எனவே, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் பொன்னேரிக்கரை வழியாக மேம்பாலம் அமைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. எனவே, பழைய சாலையில் இருந்த ரயில்வே கேட்டை ரயில்வே துறை நிரந்தரமாக மூடி, அதன் அருகே வாகனங்கள் செல்லாத அளவுக்கு மெகா பள்ளம் அமைத்து தடை செய்துள்ளனர்.

இதனால், அருகில் உள்ள அன்னை இந்திரா நகர் மற்றும் கனகதுர்கை அம்மன் நகர் விரிவாக்கப் பகுதிகளில் உள்ள சுமார் 2500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு மிக முக்கிய சாலையாக இருந்த இந்த சாலையை ரயில்வே நிர்வாகம் மூடியதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலக ஊழியர்கள், மூத்த குடிமக்கள் என யாரும் செல்ல முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் மேம்பாலம் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் அதிக வசிக்கும் இப்பகுதியில் அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மேம்பாலத்தை சுற்றி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி நேரம் முடிந்து, மாலை நேர வகுப்புகளுக்கு பின் இரவு நேரங்களில் இப்பாலம் வழியாக செல்லும் போது அச்சமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், பெண்கள் குடும்ப தேவைக்கான பொருட்கள் வாங்க கூட அதிகளவில் ஆட்டோ கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதி பொதுமக்கள் எளிதாக ரயில்வே கிராசிங்கை கடக்கும் வகையில், உடனடியாக ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.