Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மேலும் 15 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் கூடுதல் மகளிர் பயனடையும் பொருட்டு இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன்மூலம், மேலும் 15 லட்சம் மகளிர்கள் பயன்பெற வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மகளிருக்கான ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம்’ ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கப்படும்” என தமிழ்நாடு சட்டப்பேரவை பேரவையில் 2023ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி கூடுதலாக சுமார் 28 லட்சம் பெண்கள் அரசுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சுமார் 15 லட்சம் பெண்களுக்கு கூடுதலாக மாதம் ரூ.1000 வழங்க வழங்க அரசு முடிவு செய்து, டிச.12ம் தேதி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கூடுதல் மகளிர் பயனடையும் வகையில், இரண்டாம் கட்டமாக இன்று (12ம் தேதி) முதல் வழங்கப்பட உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சமூக சேவகியும் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடியவரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், 2022ம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுதிறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவருமான துளசிமதி முருகேசன், தமிழ்நாட்டின் சாதனை படைத்த பெண்கள், முக்கிய பெண் பிரபலங்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கு பெற உள்ளனர்.

இவர்களுடன் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் அரசின் பெண்களுக்கான திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளான கல்வி, தொழில் முனைவோர், மருத்துவம், காவல், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், நிர்வாகம், தொழில் உற்பத்தி, அரசியல், கலை, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்களும் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில், தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள அரசின் திட்டங்கள் விளக்கப்பட உள்ளது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டம், விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், சுய உதவி குழுக்கள், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள், போன்ற திட்டங்களினால் பயன்பெற்ற மற்றும் சாதனை பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக மாநில அளவில் இந்த ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.
  •  முதல்கட்டமாக 1,13,75,492 குடும்ப தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
  •  ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
  • மேலும் 15 லட்சம் தகுதியுடைய பெண்களுக்கும் உரிமைத் தொகை இன்று முதல் வழங்கப்பட உள்ளது.