Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரி புதிய ஆளுநராக கைலாஷ்நாதன் பதவி ஏற்றார்: முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கத்துக்குபின் கடந்த 2021 முதல் புதுவைக்கு முழுநேர கவர்னர் நியமிக்கப்படாமல் இருந்தது. இதனிடையே புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் இறுதியில் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநராக குஜராத் அரசின் முதன்மை செயலாளராக பணியாற்றிய கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தடைந்த கைலாஷ்நாதன் நேற்று காலை 11.20 மணிக்கு ராஜ்நிவாசில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிய ஆளுநராக கைலாஷ்நாதன், ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை முன்பு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் சிவா, தலைமைச் செயலர் சரத் சவுகான், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், மலர்மாலை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பங்கேற்று கைலாஷ்நாதனுக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.