திருப்பூர் : ஊத்துக்குளி அருகே மது போதையில் உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறிய முதியவரை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி காவுத்தம்பாளையம் கிராமம், வாமலை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (50). இவர், நேற்று வாமலை கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 45 அடி உயரமுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி உள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குன்னத்தூர் போலீசார் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறிய சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, ஒரு மணி நேரம் கழித்து உயர் மின்னழுத்த கோபுரத்திலிருந்து சுரேஷ் இறங்கி வந்தார். இதைத்தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
குழந்தைகள் இல்லாத நிலையில் மது போதையில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறியது தெரியவந்தது. தொடர்ந்து அவரை விசாரணைக்காக குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.