Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டார்; சுபான்சு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்: கலிபோர்னியா கடலில் விண்கலம் தரையிறங்கும்

புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா உட்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கிய பிறகு டிராகன் விண்கலம் மூலம் நேற்று பூமிக்கு புறப்பட்டனர். அவர்கள் இன்று மாலை 3 மணிக்கு கலிபோர்னியா கடலில் தரையிறங்க உள்ளனர்.

ஆக்சியம்-4 வணிக திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா, முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு ஆகியோர் கடந்த மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இதன் மூலம் 41 ஆண்டுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற சாதனைகளை சுபான்சு சுக்லா படைத்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆய்வுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்ததாக நாசா தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சுபான்சு சுக்லா குழுவினர் பூமிக்கு திரும்பும் நிகழ்வு நேற்று பிற்பகல் தொடங்கியது. பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற அதே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கிரேஸ் விண்கலத்தில் சுபான்சு உட்பட 4 வீரர்களும் பாதுகாப்பு கவச உடையுடன் ஏறினர். விண்கலத்தின் கதவுகள் பிற்பகல் 2.37 மணிக்கு மூடப்பட்டன. கடைசி நேர பரிசோதனைகளுக்குப் பிறகு டிராகன் விண்கலம், 10 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து விண்வெளியில் மிதந்தபடி பாதுகாப்பாக விலகியது.

இந்த நிகழ்வுகளை நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்தது. டிராகன் விண்கலம் குறிப்பிட்ட தூரம் விலகியதும் அதன் இன்ஜின்கள் செயல்படத் தொடங்கின. பூமியை நோக்கி விண்கலம் 22.5 மணி நேர பயணத்தை தொடங்கியது. இந்த விண்கலம் இன்று பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். அப்போது 1600 டிகிரி செல்சியஸ் வெப்ப அழுத்தத்தை தாங்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு கவசங்கள் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பின்னர் பூமியை நோக்கி வரும் விண்கலத்தின் வேகம் பாராசூட்கள் மூலம் கட்டுப்படுத்தப்படும். பூமியிலிருந்து 5.7 கிமீ உயரத்தில் விண்கலம் வந்ததும் முதல் பாராசூட் விரிக்கப்படும்.

பின்னர் 2 கிமீ உயரத்தில் பிரதான பாராசூட்கள் விரிக்கப்பட்டு விண்கலத்தின் வேகம் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இந்த விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியோ கடலில் இன்று மாலை 3.01 மணி அளவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்கலம் கடலில் விழும் நிகழ்வு ஸ்ப்ளாஷ் டவுன் எனப்படும். வெற்றிகரமாக ஸ்ப்ளாஷ் டவுன் முடிந்ததும் படகு மூலம் விண்கலம் மீட்க்கப்பட்டு வீரர்கள் வெளியில் அழைத்து வரப்படுவார்கள். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அதன் பின் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவார்கள். இந்திய விமானப்படை வீரரான சுபான்சு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராவார். அவரது இந்த வெற்றிகரமான விண்வெளிப்பயணம் ககன்யான் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘முழு தேசமும் காத்திருக்கிறது’

ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மீண்டும் வருக சுபான்சு. பூமிக்கு திரும்பும் வெற்றிகரமான பயணத்தை தொடங்கியிருக்கிறீர்கள். உங்கள் வருகைக்காக ஒட்டுமொத்த தேசமும் ஆவலுடன் காத்திருக்கிறது’’ என கூறி உள்ளார்.