Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்; பிரதமர் மோடிக்கு ‘இந்தியா’ கூட்டணி கூட்டுக் கடிதம்: பஹல்காம் தாக்குதல், ராணுவத்தின் பதிலடி குறித்து விவாதிக்க வலியுறுத்தல்

டெல்லி: பஹல்காம் தாக்குதல், ராணுவத்தின் பதிலடி குறித்து விவாதிக்க வேண்டி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் பிரதமர் மோடிக்கு கூட்டுக் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளன. பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் கடந்த 7ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் அழித்தன. இதில், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளின் முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி, முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கியிருந்தார். தொடர்ந்து, பாகிஸ்தான் தரப்பில் பூஞ்ச், ராஜோரி மற்றும் உரி பகுதிகளில் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது.

இதற்கும் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் உள்ளிட்ட பகுதிகளை தகர்த்தது. கிட்டத்தட்ட 4 நாட்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் தரப்பில் மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதன்பின் கடந்த 12ம் தேதி இருதரப்பு போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்கவும், இவ்விசயத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும் நாடாளுமன்ற எம்பிக்கள் குழு வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து விளக்கி வருகிறது. அதேநேரம் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதைத் தொடர்ந்து நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’, பாகிஸ்தானின் பூஞ்ச், ராஜோரி, உரி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பின்னர் போர் நிறுத்த உடன்பாடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கோரி ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்துவதற்கு முக்கிய காரணம் உள்ளது. அதாவது தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விசயம் என்பதால், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பஹல்காம் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியத்தை எதிர்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்தச் சூழலில், ‘இந்தியா’ கூட்டணி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தின் மூலம் தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை முன்னெடுக்க விரும்புகிறது.

முன்னதாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கோரும் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே (மாநிலங்களவை) மற்றும் ராகுல் காந்தி (லோக்சபா) ஆகியோர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கான திட்டங்கள் தற்போது தயாரிகி வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் குழு போன்ற எதிர்க்கட்சிகளும் பூஞ்ச், ரஜோரி, யூரியில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடர்பான கோரிக்கையை எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசின் தரப்பில் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.