Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை: நாட்டின் முதல் ஹைட்ரஜன் வாயு ரயில் சோதனை ஓட்டம் சென்னை ஐசிஎப்பில் வெற்றிகரமாக நடந்தது. இதுவரை நம் ரயில்கள் டீசல் அல்லது மின்சாரத்தால் இயங்கி வந்தன. ஆனால் இப்போது ஹைட்ரஜன் வாயுவின் சக்தியால் ரயில்கள் இயங்கும் புதிய காலம் தொடங்கியுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த செய்தியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘‘இந்தியா தற்போது 1,200 குதிரை சக்தி கொண்ட ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கி வருகிறது.

இது நம் நாட்டை ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தில் உலக முன்னணி நாடுகளுடன் நிறுத்தும்’’ என கூறியுள்ளார். இந்த புதிய ரயில் தொழில்நுட்பம் ஏன் முக்கியம்? வழக்கமான ரயில்கள் புகையும் கரியமில வாயுவும் வெளியிட்டு காற்றை மாசுபடுத்துகின்றன. ஆனால் ஹைட்ரஜன் ரயில்கள் எந்த மாசும் வெளியிடுவதில்லை. இவற்றின் வெளியீடு தண்ணீர் மட்டுமே. இது நம் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது.

இந்திய ரயில்வே ‘பாரம்பரியத்திற்கான ஹைட்ரஜன்’ என்ற திட்டத்தின் கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் குறிப்பாக மலைப்பகுதிகள் மற்றும் பாரம்பரிய சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும். ஒவ்வொரு ரயிலின் விலை ரூ.80 கோடி. தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒரு பாதைக்கு ரூ.70 கோடி செலவாகும். முதற்கட்டமாக, ரூ.111.83 கோடி செலவில் ஒரு சோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது இயங்கி வரும் ஒரு டீசல் ரயிலை ஹைட்ரஜன் எரிபொருள் செல்களுடன் மாற்றியமைப்பார்கள். இந்த ரயில் வட இந்திய ரயில்வேயின் ஜிந்த் - சோனிபத் பிரிவில் இயக்கப்படும். தற்போது ஹைட்ரஜன் ரயில்களை இயக்குவதற்கான செலவு அதிகம் என்றாலும், தொழில்நுட்பம் வளர்ந்து பரவலாகப் பயன்படுத்தப்படும்போது இந்த செலவு கணிசமாக குறையும். நீண்ட காலத்தில் பார்த்தால், இது பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உலகில் தற்போது ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயம். இந்த வளர்ச்சி இந்தியாவின் பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை அடைய உதவும். நம் வருங்கால சந்ததியினருக்கு சுத்தமான காற்றும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் கிடைக்க இந்த முயற்சி பெரிதும் உதவும். இது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான முதலீடு ஆகும்.