Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல்: டாக்டர் அதிர்ச்சி புகார்

மும்பை: மும்பை மலாடு பகுதியை சேர்ந்தவர் பிரண்டன் பெராவ்(26). டாக்டர். இவர் நேற்று முன்தினம் பிற்பகல் இ காமர்ஸ் செயலி மூலம் யம்மோ நிறுவனத்திடம் பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம் கோன் ஆர்டர் செய்தார். மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீமை அவர் எடுத்து ருசித்த போது அதில் ஆணியுடன் சதைத்துண்டு இருப்பதை கண்டார். இதைப்பார்த்து அதிர்ந்து போன பிரண்டன், அந்த சதைத்துண்டை எடுத்து பார்த்த போது அது மனித கட்டைவிரலில் வெட்டப்பட்ட ஒரு பாகம் என்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக எழுதியுள்ளார். அதில் மனித கட்டை விரல் துண்டு ஐஸ்கிரீமில் இருந்தது தொடர்பாக ஆன்லைன் நிறுவனத்திடம் டாக்டர் புகார் அளித்தும் சரியான பதில் வராததால், அந்த கட்டை விரல் சதைத் துண்டை ஒரு ஐஸ் பையில் வைத்து மலாடு காவல் நிலையத்திற்குச் சென்று அங்கு புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில், யம்மோ ஐஸ்கிரீம் நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 272 (விற்பனைக்கான உணவு அல்லது பானத்தில் கலப்படம் செய்தல்), 273 (தீங்கு விளைவிக்கும் உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்தல்), 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் டாக்டர் கொடுத்த மனித விரல் துண்டு எனக்கூறப்படும் சதைப்பகுதியை பெற்றுக்கொண்டு, அது மனித உடலின் ஒரு பகுதியா என்பதை அறிய தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பிரண்டன் பெராவ் கூறுகையில்,’ஐஸ்கிரீமை சாப்பிடும் போது வாயில் ஒரு பெரிய துண்டை கடித்துவிட்டேன். முதலில் அதை முந்திரி பருப்பு என நினைத்து கடித்தேன். ஆனால் கடித்த பிறகுதான் அது முந்திரி பருப்பு இல்லை என்று சந்தேகப்பட்டதால், எனது வாயிலிருந்து துண்டை வெளியே எடுத்து பார்த்த போது, அது நான் கடித்தது கட்டை விரல் சதைப்பகுதி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஐஸ்கிரீமில் சதைத் துண்டைக் கண்டுபிடித்த பிறகு, பதற்றத்தில் என் உடல் நடுங்கியது. நகத்துடன் கூடிய சதைப்பகுதி ஒன்றரை சென்டிமீட்டர் அளவுள்ளதாக இருந்தது’ என்றார்.