Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஹிஜாப் அணியாததால் தாக்குதல் உள்ளாடையுடன் போராடிய மாணவி கைது: ஈரான் பல்கலை.யில் பரபரப்பு

டெஹ்ரான்: ஹிஜாப்பை சரியாக அணியாததால் பாதுகாப்பு படையினர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்திய மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரான் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரானில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக பல கடுமையான விதிகள் உள்ளன. இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் ஹிஜாப்பை சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது.

இதை கவனித்த சிறப்பு பாதுகாப்பு படையினர் அந்த மாணவியை பொது இடத்தில் வைத்து அடித்து எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி, பல்கலைக்கழக வளாகத்திலேயே தனது ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் அரை நிர்வாணமாக அங்குமிங்கும் நடந்தார். தனது உடலையே போராட்ட ஆயுதமாக்கினார். தகவலறிந்த போலீசார் உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு விரைந்து வந்து மாணவியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அந்த மாணவி கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறி உள்ளது. தற்போது அந்த மாணவி ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுவதாகவும், அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அந்த மாணவியை வைத்திருக்கும் இடத்தை போலீசார் வெளியிடவில்லை.

இதற்கிடையே, மாணவி அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன. மாணவியின் தைரியத்தை பாராட்டிய பலரும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென குரல் கொடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவி துன்புறுத்தப்படலாம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க பல சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன. ஏற்கனவே கடந்த 2022ல் மாஷா அமினி எனும் இளம்பெண் ஹிஜாப் அணியாததால் சிறப்பு பாதுகாப்பு படையினர் தாக்கியதில் பலியானார். அதன் பின் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் 550க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.