சென்னை: நடிகை வனிதா விஜய்குமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் நடிப்பில் மிசஸ் &மிஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் சிவ ராத்திரி பாடல் இடம் பெற்றுள்ளது. தான் இசையமைத்த பாடலை தன்னுடைய அனுமதியில்லாமல் மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும், பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும் இளையராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவில், இது காப்புரிமை மீறிய செயல் என்றும் உடனடியாக அந்த பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் இளையராஜா மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்துவதோடு அவரின் பெயரும் படத்திற்கான விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார், எக்கோ, சோனி நிறுவனத்திடம் அனுமதி பெற்று தான் சம்பந்தப்பட்ட பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் காப்புரிமை மீறல் எதுவும் இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதனையடுத்து, மனுவுக்கு தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.