நீலகிரி: கனமழை காரணமாக முதுமலை யானைகள் காப்பகம் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு பகுதியில், தமிழ்நாடு வனத்துறையினர் 1927-ஆம் ஆண்டு முதல் யானைகள் முகாம் நடத்தி வருகின்றனர். இது ஆசியாவின் பழமையான யானைகள் முகாம்களில் ஒன்று. இந்த முகாம்களில் யானைகள் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. காப்பகத்தில் உள்ள யானைகளை காண பல்வேறு நாடுகளிலிருந்தும், ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் வந்து செல்வர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் கனமழை காரணமாக முதுமலை யானைகள் காப்பகம் 3 நாட்களுக்கு (ஜூலை 22) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, மரங்கள் விழுவது ஆகியவற்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு வாகன சவாரி நிறுத்தப்படுவதுடன், யானை முகாமும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


