Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2025 ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 6.2% உயர்ந்து ரூ.1.84 லட்சம் கோடியை தொட்டது..!

டெல்லி: நாட்டில் 2025 ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 6.2% உயர்ந்து ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.73 லட்சம் கோடி) தற்போது 6.2 சதவீத அதிக வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலானது. தொடா்ந்து 2-ஆவது மாதமாக கடந்த மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது.

இது, ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைத்த மூன்றாவது அதிகபட்ச வருவாயாகும். கடந்த 2024, ஏப்ரலில் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானது இரண்டாவது அதிகபட்சமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் மொத்தம் ரூ.1.84 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. ‘கடந்த ஜூனில் உள்நாட்டு பரிவா்த்தனைகளில் இருந்து ரூ.1.38 லட்சம் கோடியும், இறக்குமதியில் இருந்து ரூ.45,690 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இவை முறையே 4.6 சதவீதம், 11.4 சதவீத அதிகரிப்பாகும். ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.34,558 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,268 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.93,280 கோடி, கூடுதல் வரி ரூ.13,491 கோடியாகும். திருப்பியளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.25,491 கோடி. இது 28.4 சதவீத உயா்வு என்று அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. நிபுணா்கள் கருத்து: ‘மாதாந்திர அடிப்படையிலான எண்ணிக்கையின்படி, ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் 8.48 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய 2 மாதங்களாக ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வசூலான நிலையில், ஜூனில் ரூ.1.84 லட்சம் கோடி என்பது சற்று மந்தமானதாகும்.

தமிழகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகம், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்கள் 4 முதல் 8 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. அதேநேரம், உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் 1 முதல் 4 சதவீத அதிகரிப்பே காணப்படுகிறது’ என்று துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா். ‘ஜிஎஸ்டி வருவாய் வளா்ச்சியில் மாநிலங்களுக்கு இடையே பரந்த வேறுபாடுகள் காணப்படுவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியத் துறைகளில் முழுமையான பகுப்பாய்வு தேவை’ என்று துறைசாா் நிபுணா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி மூலம் 1,84,597 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வசூல் ஆன ரூ. 1,73,813 கோடியை காட்டிலும் தற்போது கூடுதலாக 6.2 சதவீதம் அதிகம் ஆகும். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது ஜிஎஸ்டி வசூல் இரு மடங்காகி உள்ளது. 2025 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.