சென்னை: தமிழ்நாடு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வருமான வரி செலுத்துவதில் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி ரசீதுகள் பல பான் எண்களுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. பல ஊழியர்கள் கல்வி கடன், தனிநபர் கடன் வாங்கியதாக கூறி அதற்கு வட்டி செலுத்துவதாக கூறி பல லட்சம் ரூபாயை விலக்காக கோரி உள்ளனர்.
இதுபோன்ற போலியான கோரிக்கைகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. வீட்டு உரிமையாளரின் பெயரில் போலியான வாடகை ரசீதுகளை ஊழியர்களுக்கு வருமான வரி ஆலோசகர்கள் வாங்கி கொடுத்துள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு டாக்டர்களின் பெயரில் போலி மருத்துவ சான்றிதழ்கள், ரசீதுகளை தயார் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் மின்சார வாகனத்தை கடன் மூலம் வாங்கியதாகவும் அதற்கு வட்டி கட்டுவதாக கூறி சில ஊழியர்கள் வரி விலக்கிற்கு தவறாக கோரி உள்ளனர்.
வரி செலுத்துவதற்கு போலியான காரணங்களை தெரிவித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் திருச்சி பி.எச்.இ.எல்., படைக்கலன் தொழிற்சாலை நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், நெல்லை மாவட்ட கோர்ட்டு ஊழியர்களும், பெருநிறுவனங்களின் ஊழியர்களும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் இந்த வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


