Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் வீராங்கனைகளுடன் வெற்றி கொண்டாட்டம்; மகளிர் அணியின் செயலுக்கு தலைவணங்குகிறேன்: அஸ்வின் நெகிழ்ச்சி

சென்னை: 2025ம் ஆண்டிற்கான மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. போட்டி முடிந்ததும், வர்ணனையாளர் பணியில் இருந்த முன்னாள் கேப்டன்களான மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோரை மைதானத்திற்கு அழைத்து, கோப்பையை அவர்களிடம் கொடுத்து தூக்கிக் கொண்டாடினர். இந்த நெகிழ்ச்சியான தருணம் உலகம் முழுவதும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது:- மகளிர் அணியினர் நம்பமுடியாத அளவிற்கு அற்புதமான செயலை செய்தனர். கோப்பையை மிதாலி ராஜிடம் கொடுத்த அவர்களின் செயலை கண்டு உண்மையிலேயே தலை வணங்குகிறேன். இந்திய ஆண்கள் அணி இதை ஒருபோதும் செய்ததில்லை. ஆண்கள் அணி சில சமயங்களில் கேமரா முன்பு மட்டும் முன்னாள் வீரர்களை பெருமையாக சொல்வார்கள். ஆனால், முந்தைய தலைமுறையினருக்கு அவர்கள் உரிய அங்கீகாரம் கொடுத்து நான் பார்த்ததில்லை.

‘என் தலைமுறை அணிதான் உங்களை விடச் சிறந்தது’ போன்ற விவாதங்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்திய மகளிர் அணி, அங்கே இருந்த அஞ்சும் சோப்ரா, மிதாலி ராஜ் ஆகியோரிடம், `நீங்கள் தூவி, நீரூற்றி வளர்த்த விதைகள் தான் இன்று வெற்றியாளர்களாக நிற்கின்றன’ என்று சொல்வதைப் போல, அவர்களிடம் மகிழ்ச்சியுடன் கோப்பையைக் கொடுத்தார்கள். இந்த காட்சி என்னை நெகிழ்ச்சியடைய வைத்தது. மகளிர் அணி சரியான பாதையில் பயணிக்கிறது. வெற்றியின் உச்சத்தில் இருக்கும்போது கூட, முந்தைய தலைமுறை வீராங்கனைகளை நினைவுகூர்ந்து அவர்களுடன் வெற்றியை கொண்டாடினார்கள். அதுவும், யாரும் சொல்லிக் கொடுத்து அவர்கள் அதைச் செய்யவில்லை. இவ்வாறு அஸ்வின் கூறினார்.

அஸ்வினின் இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.