சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் நடமாடுகின்றன. இதில் ஆசனூர் வனப்பகுதியில் புள்ளிமான்கள் அதிக அளவில் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோர வனப்பகுதியில் புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது வழக்கம். கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆசனூர் வனப்பகுதியில் வசிக்கும் புள்ளிமான்கள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி அலைகின்றன. கடுமையான வெயிலின் தாக்கத்தால் புள்ளிமான்கள் சாலையோர வனப்பகுதியில் உள்ள மரத்தின் நிழலில் படுத்து ஓய்வெடுக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் மனிதர்களை தாண்டி வனவிலங்குகளையும் தாக்குவதால் வனத்துறையினரும் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆங்காங்கே வனப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.