Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த அமெரிக்க பெண்ணை காப்பாற்றிய கர்நாடக காங். முன்னாள் எம்எல்ஏ: முதல்வர் சித்தராமையா பாராட்டு

பெங்களூரு: கோவாவிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் திடீரென மயங்கிய அமெரிக்கப் பெண்ணுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏவும் மருத்துவருமான அஞ்சலி நிம்பால்கர், அவசர மருத்துவ சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார். பெலகாவி மாவட்டம் கானாபூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அஞ்சலி நிம்பால்கர் ஒரு மருத்துவர். காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மற்றும் கோவா மாநில கூடுதல் பொறுப்பாளராக உள்ளார். டெல்லியில் வாக்குத் திருட்டுக்கு எதிரான பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக கோவாவிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் அஞ்சலி நிம்பால்கர் சென்றார்.

அப்போது விமானம் வானில் பறந்துகொண்டிருந்த போது, அமெரிக்கப் பெண் ஒருவர் திடீரென மயங்கினார். அவரது நாடித்துடிப்பும் நின்றுவிட்டது. மருத்துவரான அஞ்சலி நிம்பால்கர் மிக விரைவாகவும் சாமர்த்தியமாகவும் செயல்பட்டு சிகிச்சை அளித்து அமெரிக்கப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். அரை மணி நேரம் கழித்து அந்த பெண் மீண்டும் சரிந்து விழுந்தார். நாடித்துடிப்பு மீண்டும் நின்றது. ஆனால் மருத்துவர் அஞ்சலி நிம்பால்கரின் தொடர்ச்சியான முயற்சிகளால் அவர் இயல்பு நிலைக்கு திரும்பி, டெல்லி வரை அழைத்துச் செல்லப்பட்டார். விமானத்தில் அந்தப் பெண்னுக்கு அருகேயே அமர்ந்து அவரைக் கண்காணித்து, டெல்லி வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். விமானம் டெல்லி சென்றதும், ஆம்புலன்ஸ் மூலம் அந்த அமெரிக்கப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விமானத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையை சிறப்பான முறையில் கையாண்டு சிகிச்சையளித்த மருத்துவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான அஞ்சலி நிம்பால்கரின் செயலை மற்ற பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.