அண்ணாநகர்: பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து தனியார் கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என லட்சம் மோசடி செய்த கோவை வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் காவல்நிலையங்களில் 31 வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (38). அதே பகுதியில் தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இவர், கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அண்ணாநகர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனியார் கம்பெனியில் முதலீடு செய்து அதிக வருமானம் சம்பாதிக்கலாம் என பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதில் ஒரு லிங்கை தொட்டபோது தானாக வாட்ஸ்அப் குழுவில் என்னுடைய செல்போன் நம்பர் பதிவானது.
வாட்ஸ்அப் குழுவில் தனியார் கம்பெனியில் முதலீடு செய்து எப்படி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பி எனது வங்கி கணக்கு மற்றும் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை தனியார் கம்பெனியில் முதலீடு செய்தேன். அதன்பிறகு வாட்ஸ்அப் குழு தானாகவே டெலிட் ஆகிவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து பேஸ்புக் மூலம் ஆராய்ந்தபோது மோசடி கும்பலின் வேலை என்பது தெரிந்தது. எனவே, என்னுடைய பணத்தை மோசடி செய்து ஏமாற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதரவேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜிம் நடத்தி வந்தவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை விசாரணைக்காக காவல்நிலையம் வரும்படி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் சந்தேகம் வழுத்து அண்ணாநகர் போலீசார், கோயம்புத்தூரில் உள்ள ஜிம்முக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஜிம்மை வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து அவரது செல்போன் டவர் மூலம் தொடர்ந்து கண்காணித்தபோது, பெங்களூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அண்ணாநகர் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையிலான போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். நேற்று அவரை அண்ணாநகர் காவல் நிலையம் கொண்டுவந்து நடத்திய விசாரணையில், கோவையை சேர்ந்த ஷாருக் (30) என்பதும், இந்தியா முழுவதும் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பேஸ்புக் மூலம் 31க்கும் மேற்பட்ட பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஷாருக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


