திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இன்று நள்ளிரவு மூடப்பட உள்ளது. இதையொட்டி ஏழுமலையான் கோயில் முழுவதும் வெளிநாட்டு மலர்கள் மற்றும் சிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்கான முழு செலவையும் நன்கொடையாளர்கள் ஏற்று ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முதல் நாள், நான்காவது நாள், ஏழாவது நாள் ஆகிய நாட்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. 7வது நாளான கடந்த 16ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர் ₹1 கோடி செலவில் மலர் அலங்கார பணிகளை நன்கொடையாக செய்திருந்தார்.
இதில் கோயில் மண்டபத்தில் சுவாமி சிலைகளையும் வைத்து காட்சி அரங்கம் அமைத்திருந்தனர். இந்த அலங்காரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. ஆனால் திடீரென நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குறிப்பாக நன்கொடையாளருக்கு தெரிவிக்காமல் அனைத்து அலங்கார சிலைகளையும் தேவஸ்தான ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அவற்றை டிராக்டரில் ஏற்றிச்சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த நன்கொடையாளர் கோயில் வளாகத்தில் திரண்டார். அங்கு வந்த தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். நன்கொடையாளர் கூறுகையில், அதிகாரிகளின் செயல் மோசமாக உள்ளது. எங்களுடைய மன உணர்வு, பக்தி, கடவுள் மீது கொண்ட அன்பு ஆகியவற்றை தேவஸ்தான அதிகாரிகள் புண்படுத்தி விட்டார்கள் என்றார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் சமாதானப் படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


