கரூரில் டெக்ஸ்டைல் தயாரிப்புகள், கொசு வலை தயாரிப்பு ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன. கரூரில் நேரடியாக சுமார் 600 ஏற்றுமதி நிறுவனங்களும் ஏற்றுமதி சார்ந்த 400 துணை ஏற்றுமதி நிறுவனங்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஹோம்லைன் டெக்ஸ்டைல்ஸ் மூலம் கரூரில் மொத்த ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி ஆகும். உலகின் பல்வேறு நாடுகளுக்கு கரூரில் இருந்து ஜவுளி மற்றும் கொசுவலை ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் கரூரின் முக்கியமான சந்தை ஆகும். கரூரில் தயாரிக்கப்படும் ஹோம்லைன் டெக்ஸ்டைல்களுக்கான நுகர்வு கரூரில் அதிகம்.
ஹோம் லைன் டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் பெட் சீட், படுக்கை விரிப்புகள், சிறிய மற்றும் பெரிய டவல்கள், மேஜை விரிப்புகள், விண்டோ ஸ்கிரீன்கள், பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் ஏப்ரான், கை உறைகள், விதவிதமான தலையணைகள், லேடிஸ் பேக், ஒரு சில அழகு சாதன பொருட்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. டிரம்ப்பின் 25% வரி விதிப்பால் 30% அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கப்படும். ரூ.1,600 கோடி ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரூரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திக்கும் அபாயமும் உள்ளது. இது ஹோம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கொசுவலை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.