Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்; இந்தியா நிதான ஆட்டம்: ஜெய்ஸ்வால், கில் அரைசதம்

பர்மிங்காம்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ேபாட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ இங்கிலாந்து தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது. நேற்று 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் துவங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் களமிறங்கினர். இங்கிலாந்தின் வேகம் வோக்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நட்சத்திர ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 26 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்களில் அவுட் ஆகினார். அடுத்து வந்த கருண் நாயருடன் ஜோடி சேர்ந்து ஜெய்ஸ்வால் ஸ்ேகாரை உயர்த்தினார். ஸ்கோர் 95ஐ எட்டும்போது, கருண் நாயர் 50 பந்தில் 5 பவுண்டரியுடன் 31 ரன் எடுத்து கார்ஸ் பந்தில் புருக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த கேப்டன் கில் நிதான ஆட்டத்தை கடைபிடிக்க ஜெய்ஸ்வால் ஒன்டே கிரிக்கெட் போல் ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 107 பந்தில் 13 பவுண்டரியுடன் 87 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் கீப்பர் ஜேமி ஸ்மீத்திடம் பிடிபட்டார். அடுத்து முதல் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்து கலக்கிய பன்ட் களமிறங்கி கில்லுடன் சேர்ந்து தடுப்பாட்டம் ஆடினார். தேனீர் இடைவேளைக்கு பிறகு ஸ்கோர் 193 ரன்னை எட்டிய போது கில் 129 பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து பண்ட் 25 ரன்னில் இருந்த போது பசீர் பந்தில் கிரவுலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த நித்திஷ்குமார் ரெட்டி 1 ரன்னில் அவுட் ஆனார். 61.4 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்தது. கில் 59 ரன், ஜடேஜா ரன் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

பும்ரா ஆப்சென்ட்;

இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில் இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதுகில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்றுள்ள பும்ரா, தொடர் துவங்கும் முன்பே, 5 டெஸ்ட்களில் 3ல் மட்டுமே பங்கு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். எனவே, நேற்று துவங்கிய 2வது டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்தியாவின் பிளேயிங் 11 அணியில் இடம்பெற்றிருந்தார்.