Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வரம்பு மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு உச்சநீதிமன்றம் தடை..!!

டெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்தினர். இதன்படி டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் ஒன்றிய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். டாஸ்மாக் கடைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் மற்றும் அதனைத் தொடர்ந்த சட்ட நடவடிக்கைகள் குறித்த தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் பதிலளிக்க அமலக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தினமீது நடவடிக்கை எடுப்பதா? என கேள்வி எழுப்பினர். கூட்டாட்சி தத்துவத்தை அமலாக்கத்துறை சிதைக்கிறது. மேலும் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தலாம். எந்த மூல வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது? ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்?. அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது. வரம்பு மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது என கண்டனம் தெரிவித்துள்ளனர்.