Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

100 நாள் வேலை திட்டத்துக்கு புதிய பெயர் மகாத்மா காந்தி பெயரில் என்ன தவறு உள்ளது? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டத்திற்கு மறுபெயரிடுவதற்கான மசோதா தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஸ்கர் யோஜ்னா என மாற்றுவதற்கும், வேலை நாட்களின் எண்ணிக்கையை 125 நாட்களாக அதிகரிப்பதற்குமான புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் தனது எக்ஸ் தள பதிவில்,’ஒரு காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை தோல்வியின் சின்னம் என்று பிரதமர் மோடி அழைத்தார். இப்போது அந்த புரட்சிகர திட்டத்துக்காக பெருமை பெறுவதற்காக அதன் பெயரை மாற்றுகிறார். இது மகாத்மா காந்தியை நமது தேசிய ஆன்மாவில் இருந்து குறிப்பாக கிராமங்களில் இருந்து அழிப்பதற்கான மற்றொரு வழியாகும். இந்த திட்டத்திற்கு வேண்டுமென்றே இழைக்கப்படும் புறக்கணிப்பை மூடிமறைப்பதற்காக ஒரு மேம்போக்கான மாற்றம் மட்டுமே இந்த பெயர் மாற்றும் நடவடிக்கை.

அரசின் யோசனைகள் ஆனால் நீங்கள் அதற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் மாற்றுங்கள், இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திற்கும் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் என்பது மக்களுக்குத் தெரியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ அரசு திட்டங்கள், சட்டங்களின் பெயரை மாற்றி, அவர்களது திட்டம், சட்டம் போல் வடிவமைப்பதில் மோடி அரசு ஒரு வல்லுநர்.

அவர்கள் நிர்மல் பாரத் அபியானை ஸ்வச் பாரத் அபியான் என்றும், கிராமப்புற எல்பிஜி விநியோகத் திட்டத்தை உஜ்வாலா என்றும் பெயர் மாற்றினர். ஏனெனில் அவர்கள் மறுசீரமைப்பு மற்றும் பிராண்டிங்கில் வல்லுநர்கள். அவர்கள் நேருவை வெறுக்கிறார்கள். இப்போது அவர்கள் மகாத்மா காந்தியையும் வெறுப்பது போல் தெரிகிறது. மகாத்மா காந்தி என்ற பெயரில் என்ன தவறு இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ஏன் ‘பூஜ்ய பாபு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ என்று பெயர் மாற்ற வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினார்.