Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரர் உட்பட 2 பேர் பரிதாப பலி: பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வந்த மகள் கதறல்

நெல்லை: நெல்லை கொக்கிரகுளம், உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (55). இவரது வீட்டில் கழிவறை சீரமைக்கும் பணி நடந்து வந்தது. அந்த சுவரின் அருகே மின் கணக்கீட்டு மீட்டர் பெட்டி இருந்தது. நேற்று கஜேந்திரன் மகன் வேலாயுதம் (30), மோட்டார் சுவிட்சை போட்டு பிளாஸ்டிக் குழாய் மூலம் புதிதாக கட்டிய சுவருக்கு தண்ணீர் பீய்ச்சியடித்துள்ளார். இரும்பு ஏணியை சுவரில் சாய்த்து பயன்படுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியது.

அவரது அலறல் கேட்டு காப்பாற்ற வந்த தொழிலாளி ரவியையும் (47) மின்சாரம் தாக்கியது. இவர்களை மீட்கச் சென்ற மாரியப்பன் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.அக்கம்பக்கத்தினர் மின்வயர்களை அறுத்து விட்டு 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வேலாயுதமும், ரவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மாரியப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த வேலாயுதம் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் ஸ்போர்ட்ஸ் ஒதுக்கீட்டில் வேலைக்கு சேரும் முயற்சியில் சென்னையில் தங்கி ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பலியான ரவியின் மகள் நேத்ரா லெட்சுமி, நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். நேற்று பிளஸ்2 பொதுத்தேர்வு எழுத சென்றவர் தேர்வு முடிந்து வீடு திரும்பியபோது தந்தை மின்சாரம் தாக்கி உயரிழந்ததை கண்டு கதறி அழுதார்.