Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்கறை, சொரணை இருந்தால் ஒன்றிய அரசிடம் பேசி தமிழகத்துக்கு கல்விநிதி பெற்று தரவேண்டியதுதானே?: அண்ணாமலைக்கு பி.கே.சேகர்பாபு கேள்வி

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘’அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ நிகழ்வானது ஓட்டேரி முத்து நகர், சூளையில் உள்ள கே.எம்.கார்டன் தெருவில் நடைபெற்றது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; மக்கள் மகிழ்ச்சியாக உணவுகளை பெற்று வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 13 மாதம் இருக்கிறது. 10 மாதத்தில் ஆட்சிக்கு வருவோம் என்றால் எப்படி மந்திரம் மற்றும் யாகம் செய்து வர வைப்பாரா, ஜனநாயக ரீதியாக தேர்தலை எதிர்கொள்ள திமுக களத்தில் நின்றுகொண்டிருக்கிறது. ஆனால் முருகனையோ அண்ணாமலையோ தொடர்புகொண்டு பாருங்கள் அவர்கள் கிடைப்பார்களா? களத்தில் ஒன்றிணைந்து மக்களோடு திமுக பயணித்து வருகிறது. 200 நிச்சயம் 234 எங்கள் லட்சியம்.

பாஜக ஏற்கனவே விரட்டப்பட்ட இயக்கம். மதத்தால் இனத்தால் பிரிவினையை உண்டாக்க நினைத்தவர்களுக்கு தமிழக மண்ணில் இடமில்லை என்பதை அறிந்த பிறகு மாணவ செல்வங்கள் இடையே இந்த சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். மோடி சென்ற இடமெல்லாம் எப்படி கோ பேக் மோடி என்றார்களோ அதுபோல் இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறவர்களுக்கு எதிர்ப்பாக கோ பேக், கோ பேக் என்ற குரல்தான் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஊடக வெளிச்சத்திற்காக இரண்டு நாட்கள் சென்று இருப்பார்கள். அதன்பிறகு காணவில்லை. இந்த சூழ்நிலை தொடருமானால் மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகிவிடும் என பாஜகவுக்கு எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்வி என்பது மாநகராட்சி பள்ளியில் ஒதுக்கப்பட்ட சூழலை இருந்ததை மாற்றி கல்வித் தலங்களாக மாற்றிய பெருமை முதலமைச்சரின் வழியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். தமிழகத்தை மட்டுமல்ல மத்திய அளவில் உலக அளவில் கல்வித்தரத்தை கல்வி கட்டமைப்பை பின்பற்றுகின்ற நல்லசூழல் அமைந்திருக்கிறது. ஆன்மீகத்துக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போது அது துருப்பிடித்தது. கல்வித் துறைக்கு எதிராக எடுத்திருக்க கூடிய ஆயுதமும் துருப்பிடிக்கும். எங்களுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். கல்வியின் பாலும் தமிழகத்தின் மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் இதை பேசுபவர்கள் சொரணை இருந்தால் மத்திய அரசிடம் கேட்டு நிதியை பெற்று தர வேண்டும். கடல் வத்தி கருவாடு திண்ணலாம் என காத்திருந்த கொக்கு குடல் வத்தி இறந்து போகும் கதையாக தான் பாஜகவின் கனவு.சென்னையில் 200 வார்டு உள்ளது. ஒரு வார்டில் கவுன்சிலர் ஆகியுள்ளார்கள். கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டத்துக்கு எப்படி வழி காட்ட முடியும்.இவ்வாறு கூறினார்.