Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல ஆண்டுகளாகத் துணை நிற்கும் சொந்த மண்ணின் நிறுவனங்களை ஆதரிப்போம்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

சென்னை: உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல ஆண்டுகளாகத் துணை நிற்கும் சொந்த மண்ணின் நிறுவனங்களை ஆதரிப்போம் என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறுகையில், கோவையில் நடைபெற்ற TNRising மாநாட்டிற்கு பிறகு, இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோர் ஒருவர் எங்களிடம் பேசினார். தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் மிகப்பெரிய இன்டஸ்ட்ரியாக உணவு தயாரிக்கும் துறை இருக்கிறது, இந்தத் துறையை மேலும் விரிவுபடுத்தத் தேவையான முதலீடு, துல்லியமான செயல்பாடு, சீரான கட்டமைப்பு ஆகியவை இன்னும் கூடுதலாகத் தேவைப்படும் நிலையில், பலரும் இந்த உணவுத்துறையை ஒரு முக்கியமான தொழிலாகவே பார்ப்பதில்லை என்று சொன்னார்.

இந்தப் பார்வை மாற வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். அதற்காக தொடர்ந்து உழைக்கிறோம். உணவுத் துறைக்கு தேவையான நிதி உதவி, திறமையான பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), உலகளாவிய அளவில் உணவுத் துறை விரிவாக்கம் ஆகியவை இப்போது தேவைப்படுவதையும், உணவுத்துறையை உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரமாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம். தமிழ்நாட்டு மக்களால் அதிகம் விரும்பப்படும் உணவு நிறுவனங்களைக் கூட சிலர் ஏளனம் செய்வதையும் பார்க்க முடிகிறது. நம் மாநிலத்தில் உள்ள தொழில்முனைவோருக்கு இந்த ஏளனத்தை விடப் பெரிய அவமரியாதை இருக்க முடியாது.

அவமரியாதை நிலைமையை மாற்றி, சுயமரியாதையை உருவாக்கும் வகையில், கோவையில் கையெழுத்திடப்பட்டிருக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) ஏதோ சிறிய அளவிலான சமையல் தொழில்களுக்கும் சின்னச்சின்ன ஹோட்டல்களுக்குமான ஒப்பந்தமல்ல. வளர்ச்சி மிகுந்த தொழில்துறை அளவிலான உணவு உற்பத்தி, குளிர்பதனச் சங்கிலிகள் (Cold chains), ஏற்றுமதி, உணவு விற்பனையில் உலகளாவிய சில்லறை வணிக விரிவாக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளுக்கான ஒப்பந்தங்கள் இவை. இப்படிப்பட்ட துணிச்சலான முன்னோடி நடவடிக்கைகளுக்கு நம் திராவிட மாடல் அரசு ஆதரவளிப்பதைக் கண்டு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்!

அன்னபூர்ணா, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், A2B இதெல்லாம் பிரபலமான உணவகங்களாக மட்டுமே நமக்குத் தெரிந்திருப்பதால், அவற்றின் செயல்பாடு என்பது நாம் பார்ப்பது மட்டுமல்ல, அதைத் தாண்டிய நவீன உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் லட்சியத்தைக் கொண்ட முழுமையான உணவு பதப்படுத்தும் நிறுவனங்களாக அவை உள்ளன. நம் சொந்த மண்ணில் உள்ள இந்த நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு, ஏன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நம் கேள்வி. நம் சொந்த முதலீட்டாளர்களை நாம் கொண்டாட வேண்டாமா? அமெரிக்க அல்லது ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் திறனையும் வணிகத்தையும் நம் மண்ணில் வளர்த்துக்கொள்ள விரும்பும்போது தமிழ்நாடு உதவுகிற நிலையில், ஏற்கனவே நம் மண்ணில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உணவுத் தொழிலில் நம்பிக்கையை வளர்த்து, உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல ஆண்டுகளாகத் துணை நிற்கிற நம் சொந்த மண்ணின் நிறுவனங்களை நாம்தானே ஆதரிக்க வேண்டும்?

நம் மாநிலத்தில் உள்ள நிறுவனங்கள் தான் நமக்கு உணவளிக்கின்றன, வேலைவாய்ப்பைத் தருகின்றன, மேலும் தமிழ்நாட்டின் அடையாளத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்கின்றன. அவர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி (Single-window facilitation) கிடைக்க வேண்டும், ஏற்றுமதி செய்வதற்கு ஆதரவு கிடைக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாட்டு நிறுவனங்களைப் போல உள்நாட்டு வணிக நிறுவனங்களும் 'பெரிய கனவுகளைக் காண' தகுதியானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் மாநில உணவு நிறுவனங்களை அவமானப்படுத்துவது என்பது அவர்களின் கடின உழைப்பை அவமதிப்பதாகும். அவர்களின் வளர்ச்சிக்குத் துணையாக இருப்பதே வலுவான தமிழ்நாட்டைக் கட்டமைக்கும். அதனால் நம் சொந்த மண்ணின் நிறுவனங்களை ஆதரிப்போம். ஒட்டுமொத்த உணவுத் துறைக்கும் உதவ நாங்கள் கூடுதலாக உழைப்போம்.

எதிர்பார்த்திருங்கள். நம் மாநில நிறுவனங்களின் வளர்ச்சிக்கான இன்னும் பல திட்டங்கள் வரவிருக்கின்றன.