Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியின் சிறப்பு, திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறுங்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தண்டையார்பேட்டை: திமுக இளைஞரணி சார்பில், பெரம்பூர், ராயபுரம், ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில் கலைஞர் நூலகம், கலைஞர் சிலை திறப்பு விழா, கேரம் விளையாட்டு மையம், பெண்கள் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இவற்றை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், வியாசர்பாடி கல்யாணபுரத்தில் கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி வீட்டிற்கு சென்று லேப்டாப் வழங்கினார். முன்னதாக வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் கலைஞர் சிலையை திறந்து வைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது:

தமிழகத்தில் முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். குறிப்பாக, பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதமாதம் ஆயிரம் ரூபாய், அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிக்க புதுமைப்பெண் திட்டம் என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தமிழகத்தில் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தகுதியுள்ள மகளிர்களை கணக்கில் எடுத்து அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

இன்னும் தேர்தல் வர 9 மாதம் உள்ளது. மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் ஆட்சியின் சிறப்பு குறித்தும், திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்து கூறுங்கள். முதல்வரை 2வது முறையாக நாற்காலியில் அமர வைக்க வேண்டும். 200 தொகுதிகளில் குறையாமல் வெற்றி பெறுவோம் என முதல்வர் கூறியதை நிறைவேற்றும் வகையில், இளைஞர் அணியினர், கழகத்தினர் மக்களிடையே திமுக ஆட்சியின் சிறப்பு குறித்து கூறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது, ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, தேர்தல் நிதியாக ஒரு கோடி ரூபாயை துணை முதல்வரிடம் வழங்கினார்.

இதை பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், இதுபோல் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தேர்தல் நிதி வழங்கவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைத்தார். நிகழ்ச்சியில், கலாநிதி விராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், ராயபுரம் தொகுதி பொறுப்பாளர் சுபேர்கான், இளைய அருணா, பகுதி செயலாளர் செந்தில்குமார், வ.பெ.சுரேஷ், லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், வழக்கறிஞர் மருது கணேஷ், மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், முருகன், ஜெயராமன், நரேந்திரன், கருணாநிதி, பகுதி துணை செயலாளர் வேதா, மாமன்ற உறுப்பினர்கள் சர்வ ஜெபதாஸ், ஆனந்தி, மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.