டெல்லி : டெல்லி காற்று மாசு விவகாரத்தில் அம்மாநில அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமன நிலையை எட்டியுள்ளது. காற்றின் தரம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே காற்று மாசை கட்டுப்படுத்த தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு அரசு தடை விதித்தது. ஆனால் பட்டாசுகளுக்கு தடை என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என ஊடகங்களில் செய்தி பரவியது. இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "டெல்லியில் தற்போதுள்ள பட்டாசு தடை என்பது கண்துடைப்பாக உள்ளது. மக்கள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கித் தருவது அடிப்படை உரிமை. மக்கள் உடல்நலனுக்கு கேடு உண்டாக்கும் எந்த நடவடிக்கைகளிலும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. டெல்லியில் பட்டாசு வெடிக்க பண்டிகை காலங்களில் மட்டும் தடை விதித்தால் போதாது; திருமணம், தேர்தல் நேரங்களிலும் பட்டாசு வெடிப்பதை ஏன் தடுக்கக் கூடாது? ஜனவரி ஒன்றாம் தேதி வரை தற்போது தடை உள்ளது: அதனை ஆண்டு முழுவதும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். நவம்பர் 25ம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு டெல்லி அரசுக்கும், டெல்லி தலைநகர் பகுதி மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது, "இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


