Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டிட்வா புயலால் இலங்கையில் சிக்கிய கல்லூரி மாணவ, மாணவிகள் 40 பேர் சென்னை வந்தனர்

சென்னை: டிட்வா புயல் மழையால் இலங்கையில் சிக்கி தவித்த சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 40 பேர் விமானத்தில் சென்னை திரும்பினர்.சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 18, மாணவிகள் 22 என மொத்தம் 40 பேர், கடந்த நவம்பர் 22ம் தேதி சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இலங்கை வழியாக மலேசிய நாட்டிற்கு சுற்றுலா சென்றனர்.

மலேசிய சுற்றுலாவை முடித்துவிட்டு, இந்த மாணவ, மாணவிகள் 40 பேரும் கடந்த 28ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இலங்கை வழியாக சென்னைக்கு திரும்பி வருவதற்காக வந்தனர். ஆனால் அப்போது இலங்கை முழுவதும் டிட்வா புயல் மழை வெள்ளம் ஆட்கொண்டு, இலங்கையே தத்தளித்துக் கொண்டு இருந்தது.எனவே இவர்கள் 40 பேரும் சென்னைக்கு திரும்புவதற்கு விமானம் இல்லாமல், இலங்கையில் கொழும்பு விமான நிலையத்தில் 3 நாட்களாக தவித்துக் கொண்டு இருந்தனர். பெருமழை வெள்ளம் காரணமாக, உணவு விடுதிகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால், உணவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே இலங்கையில் மழை வெள்ளத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சிக்கித் தவிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்து, தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மூலமாக, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தது. எனவே இந்திய தூதரக அதிகாரிகள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்தனர். அதன்படி இந்திய தூதரக அதிகாரிகள் 40 மாணவ, மாணவிகளையும் பத்திரமாக தங்க ஏற்பாடு செய்ததோடு, அவர்களுக்கு உணவு போன்ற வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

இந்த 40 மாணவ, மாணவிகளும் ஏற்கனவே இலங்கையில் இருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு வருவதற்கு கனெக்டட் பிளைட் டிக்கெட்டுகள் வைத்திருந்தனர். எனவே இந்திய தூதரக அதிகாரிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகத்திடம் பேசி இலங்கையில் இருந்து, 3 நாட்களுக்கு பின்பு, நேற்று முன்தினம் (ஞாயிறு) இரவு சென்னைக்கு புறப்பட்ட முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 40 பேரையும் பத்திரமாக அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மாணவ, மாணவிகளை வரவேற்றனர்.