அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை இன்று அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் வாசிக்க வேண்டும்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76ம் ஆண்டினையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76ம் ஆண்டினையொட்டி அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அம்பேத்கர் வடிவமைத்து தந்த நமது அரசியலமைப்பு சட்டமாகும். தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளை போற்றி பாதுகாத்து, சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் ஆகும். கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு உட்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிவகைகளை உருவாக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 15(3)-வது பிரிவின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்தமையால், தனது செயல்பாடுகளில் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் அவற்றை செயல்படுத்தி, அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இந்த அரசு பெருமை கொள்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில் இன்று (26ம் தேதி) நாளன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்டுபாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சு போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

