Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இளம்பெண் பலாத்கார புகார்: காங்கிரஸ் எம்எல்ஏ தலைமறைவு; கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக இளம்பெண் ஒருவர் முதல்வரிடம் பலாத்கார புகார் கொடுத்ததையடுத்து போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து ராகுல் மாங்கூட்டத்தில் தலைமறைவாகி விட்டார். கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராகவும் இருந்தார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுடன் நடத்திய சாட்டிங், ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. தான் கர்ப்பிணியாக இருப்பதாக இளம்பெண் கூறுவதும், கர்ப்பத்தை கலைக்குமாறு ராகுல் மாங்கூட்டத்தில் மிரட்டல் தொனியில் பேசுவதும் ஆடியோவில் இருந்தது. இந்த ஆடியோ கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக கம்யூனிஸ்ட், பாஜ உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து ராகுல் மாங்கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே போராட்டம் வலுத்ததால் ஒரு சில மாதங்கள் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அவரால் பாலக்காடு தொகுதிக்கு வர முடிந்தது. சில நாளாக பாலக்காட்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார். இந்தநிலையில் ராகுல் மாங்கூட்டத்திலுடன் சாட்டிங் நடத்திய இளம்பெண் திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து புகார் கொடுத்தார்.

அதில் ராகுல் மாங்கூட்டத்தில் தன்னை கர்ப்பிணியாக்கியதாகவும், கர்ப்பத்தை கலைக்க கூறி மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வாட்ஸ்அப் சாட்டிங், ஆடியோ உள்பட டிஜிட்டல் ஆதாரங்களையும் அளித்தார். இந்தப் புகாரை பினராயி விஜயன் குற்றப்பிரிவு ஏடிஜிபிக்கு அனுப்பி வைத்தார். அதைத்தொடர்ந்து புகார் கொடுத்த இளம்பெண்ணிடம் நேற்று மாலை திருவனந்தபுரம் எஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரித்து, வாக்குமூலம் பெற்றனர். பின்னர் ராகுல் மாங்கூட்டத்தில் எம்எல்ஏ மீது பலாத்காரம், கட்டாயப்படுத்தி கருச்சிதைவு செய்ய வைத்தது ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வலியமலை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராகுல் மாங்கூட்டத்திலை விரைவில் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்திலை கைது செய்யக்கோரி நேற்று பாலக்காடு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே முதல்வரிடம் இளம்பெண் பலாத்கார புகார் கூறிய தகவல் அறிந்ததும் ராகுல் மாங்கூட்டத்தில் எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கைது செய்யப்படலாம் என்ற தகவலையடுத்து தலைமறைவானார். பாலக்காட்டில் உள்ள எம்எல்ஏ அலுவலகமும் பூட்டப்பட்டு உள்ளது. இதற்கிடையே கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற ராகுல் மாங்கூட்டத்தில் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.