Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இருதரப்புக்கும் இடையே சமரச தீர்வு; ஜப்தியில் இருந்து தப்பியது சிவாஜி வீடு: ஐகோர்ட்டில் மேல் முறையீடு வழக்கு முடித்துவைப்பு

சென்னை: ஜகஜால கில்லாடி என்ற பெயரில் படம் தயாரிப்பதற்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். வட்டியுடன் சேர்த்து ₹9 கோடி கடனை திருப்பித் தரக் கோரி தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு மத்தியஸ்தம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மத்தியஸ்தர், ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்க துஷ்யந்த் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், வீடு தனக்கு சொந்தமானது என்றும், தனது தந்தை சிவாஜி கணேசன் தனது பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளதால் இந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர் பிரபு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்பதால் ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில், கடன் பிரச்னையில் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச தீர்வு காணப்பட்டு விட்டதால், இந்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு மேல் முறையீட்டு வழக்கை திரும்ப பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.