Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள்: அடுத்த மாதம் சோதனை ஓட்டம்; ஜனவரியில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு, அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது, என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் பொது போக்குவரத்து சேவையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டம் சார்பில், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித் தடங்களில் தினமும் 630க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

அந்த ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. இந்த நிலையில் கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க பயணிகள் நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெற்கு ரயில்வேயுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் சென்னை மின்சார புறநகர் ரயில்களில் சோதனை அடிப்படையில் ஏ.சி. பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை அளித்து இருந்தது.

அந்த பரிந்துரையின் கீழ், சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. முதற்கட்டமாக சோதனையின் அடிப்படையில் ஒவ்வொரு மின்சார ரயில்களிலும் 2 முதல் 3 ஏ.சி.பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் நடத்துவதற்கு தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஏசி ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே அடுத்த மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு மின்சார ரயில்களில் ஏ.சி பெட்டிகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.