தோட்டங்களில் கலர்மீன் வளர்ப்பு பண்ணை அமைத்து வியாபாரம்: இந்த ஆண்டு விற்பனை மந்தமாக உள்ளதாக விவசாயிகள் கவலை
வத்தலகுண்டு : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கலர்மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் நடப்பாண்டில் விற்பனை மந்தமாக நடைபெறுவதாக கவலை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விருவீடு, கோபாலபுரம், தர்மத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயத்தில் போதிய வருமானமின்றி விவசாயிகள் தோட்டங்களில் கலர்மீன் வளர்ப்பு பண்ணை அமைத்துள்ளனர். அங்கிருந்து கேரளா மற்றும் சென்னைக்கு அதிகளவில் கலர்மீன்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு விற்பனை சிறப்பாக நடைபெற்ற நிலையில் நடப்பாண்டில் கலர்மீன் வணிகம் சரிவை சந்தித்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வீடோ ரக கலர் மீன் ஒன்று கடந்த ஆண்டு ரூ.20க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் ரூ.7 க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கேரளாவில் அதிக அளவில் கலர் மீன்கள் விற்பனையாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு விற்பனை மந்தமாக இருந்தாலும் புத்தாண்டிற்கு கலர் மீன்கள் விற்பனை அதிகரிக்கும் என்று நம்பிக்கை உடன் காத்திருக்கின்றனர்.


