Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் கல்லூரி மாணவி எரித்துக்கொலை: வாலிபர் வெறிச்செயல்

திருமலை: வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கோபாவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று மதியம் ஒரு இளம்பெண் எரியும் தீயுடன் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கதறியபடி சாலையில் ஓடிவந்தார்.

அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயை அணைத்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த தீக்காயத்துடன் தவித்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு பத்வேல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கடப்பா மாவட்டம் பத்வேல் ராமாஞ்சநேய நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(20). தீக்காயமடைந்த பெண் தஸ்தகிரிம்மா (18), அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் விக்னேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவியை விட்டுவிட முடிவு செய்தார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட விக்னேஷ், நேற்று கோபாவரம் தேசிய நெடுஞ்சாலையொட்டிய ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் ஆசையாக பேசிக்கொண்டிருந்த விக்னேஷ், தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டர் மூலம் மாணவி மீது திடீரென தீ வைத்துள்ளார். தீ மாணவி அணிந்திருந்த உடைகள் மீது பரவி உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விக்னேஷை தேடி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி தஸ்தகிரிம்மா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான விக்னேஷை இன்று கைது செய்தனர். காதல் தகராறில் நடந்துள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.