Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை மாநகராட்சியில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும் இன்று தீவிர தூய்மை பணி

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும் இன்று (16.09.2025) தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினசரி சராசரியாக 6.300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் சராசரியாக நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து நிறுத்தங்கள், சாலைகள், பாலங்கள், மயான பூமிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தீவிரத் தூய்மைப் பணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சுவரொட்டிகளை அகற்றுதல், பேருந்து நிறுத்தங்களைச் சுற்றி உள்ள செடிகள், குப்பைகள் உள்ளிட்ட திடக்கழிவுகளை அகற்றுதல், தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணியினை கண்காணித்து சிறப்பாக மேற்கொள்ள உரிய பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களது மேற்பார்வையில் இந்த தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.